அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தீன் BA மதனி. பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு
இரு புனிதஸ் தலங்களின் பாதுகாவலரான (காதிமுல் ஹரமைனிஷ் ஷரீஃபைன்) மாமன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் ஸஊத் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் ஸஊத் (அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பானாக) ஆகியோரின் கரங்களால், புனித கஃபாவை நாள் முழுவதும், குறிப்பாகத் தொழுகை நேரங்களில் நறுமணமூட்டித் தூய்மைப்படுத்துவதும், ஆண்டில் பலமுறை அதனைக் கழுவுவதும் சவூதி அரேபிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மகத்தான கவனிப்பும், பாக்கியம் பொருந்திய முயற்சியுமாகும். இது அல்லாஹ்வின் வீட்டினை கண்ணியப்படுத்துதல் மற்றும் அவனது பழமை பொருந்திய அல்லாஹ்வின் மாளிகைகளில் சேவை செய்தல் ஆகியவற்றின் பிரகாசமான வெளிப்பாடாகும்.
இந்தச் சிறப்பான சேவைகள் இன்று நேற்றுத் தோன்றியதல்ல; மாறாக, இது இந்தப் பாக்கியம் பொருந்திய நாட்டின் ஸ்தாபகர் மன்னர் அப்துல்அஸீஸ் அல் ஸஊத் (அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக) அவர்களின் காலத்திலிருந்து நமது தற்போதைய பொற்காலம் வரை வேரூன்றியுள்ள ஒரு கொள்கையின் தொடர்ச்சியாகும். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அங்கு வருகை தருபவர்களுக்குச் சேவை செய்வதிலும், மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுந் நபவி ஆகியவற்றைப் பராமரித்து, ஒழுங்கமைத்து, மேம்படுத்துவதிலும் இந்தச் சிறந்த தலைமை தனது அதீதக் கவனத்தைத் தொடர்ந்து செலுத்தி வருகிறது.
இந்தப் பழமையான அல்லாஹ்வின் மாளிகைகளை தூய்மைப்படுத்துவதிலும், நறுமணமூட்டுவதிலும், கிருமி நீக்கம் செய்வதிலும், மேலும் தொழுபவர்கள், உம்ரா செய்பவர்கள் மற்றும் பார்வையாளர்களை உயரிய தரத்திலான கவனிப்புடன் வரவேற்பதிலும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள், தலைமையின் உள்ளத்தில் இரு புனிதத் தலங்களுக்கும் உள்ள உன்னதமான இடத்தை உண்மையாகப் பிரதிபலிக்கின்றன.
அத்துடன், அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு அமைதி, நிம்மதி மற்றும் ஆன்மீகச் சூழலை உருவாக்குவதில் அவர்கள் கொண்டுள்ள நிலையான ஆர்வத்தையும் இது காட்டுகிறது.
தனது இல்லங்களுக்குச் சேவை செய்பவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான்; மாறாக, அவர்களின் மதிப்பையும் அந்தஸ்தையும் அவன் மேலோங்கச் செய்கிறான். இரு புனிதத் தலங்களுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைக் கொடுத்து இவ்வுலகில் யாருடைய பெயரையும் புகழையும் அல்லாஹ் உயர்த்தினானோ, மறுமையிலும் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தவும், அவர்களுக்குச் சிறந்த நற்கூலியை வழங்கவும் அவனிடமே நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்தத் தூய தலங்கள் சவூதி குடும்பத்தின் ஆட்சிக்குக் கீழல்லாமல் வேறு ஆட்சியின் கீழோ, அல்லது சவூதி அரேபியா அல்லாத வேறொரு நாட்டிலோ இருந்திருந்தால், ஒருவேளை அதன் பல அடையாளங்கள் மாறியிருக்கலாம். கவனிப்பு மற்றும் நிர்வாகத்தின் முறைகள் வேறுபட்டிருக்கலாம்; மேலும் அந்த இடத்தின் புனிதத்தன்மைக்குச் சற்றும் பொருந்தாத தர்காக்கள் மற்றும் இணைவைப்புச் செய்யும் இடமாக (ஷிர்க்) நீங்கள் அதை கண்டிருக்கக்கூடும்.
அத்துடன், இரு புனிதத் தலங்களுக்கும் அங்கு வருபவர்களுக்கும் சேவை செய்வதில் ஒருவேளை பெருங்குழப்பமே நிலவியிருக்கக் கூடும்.
ஆனால், தூய்மையான ஏகத்துவத்தைப் (தவ்ஹீத்) பாதுகாப்பதற்கும், மார்க்கச் சின்னங்களைக் கண்ணியப்படுத்துவதற்கும், அதியுயர் மட்டங்களில் சேவைகளை ஒழுங்கமைப்பதற்கும் தங்கள் உழைப்பையும் வளங்களையும் அர்ப்பணித்த ஒரு தலைமையை இந்தப் பாக்கியம் பொருந்திய இடத்திற்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான். பூமியின் மிகச் சிறந்த தலங்களான மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுந் நபவியைப் பராமரிக்கவும் கவனிக்கவும் தகுதியான சிறந்தவர்களை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்தமை அவனது மாபெரும் அருளாகும்.
புனித கஃபா என்றென்றும் தூய்மையாகவும் நறுமணத்துடனும் திகழ வேண்டும்! இரு புனிதத் தலங்களின் பாதுகாவலரான மாமன்னர் மற்றும் பட்டத்து இளவரசர் (அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பானாக) உட்பட, அதற்கெனச் சேவை செய்யும் பாக்கியத்தை அல்லாஹ்வால் பெற்றவர்களின் முயற்சிகளும் சிறந்து விளங்க வேண்டும்!
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அவர்கள் ஆற்றும் அளப்பரிய சேவைகளுக்காக அல்லாஹ் அவர்களின் முயற்சிகளில் அருள்வளம் (பரக்கத்) புரிவானாக! அவர்களுக்குச் சிறந்த நற்கூலியை வழங்கி, அதனை அவர்களின் நன்மைகளின் தராசில் கனமாக்கவுமாக! சவூதி அரேபியாவின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நிலைத்தன்மையை அல்லாஹ் நிரந்தரமாக்கி, அதனை இஸ்லாத்தின் அரணாகவும் இரு புனிதத் தலங்களுக்கும் சேவை செய்யும் நாடாகவும் என்றென்றும் ஆக்கியருள்வானாக!
Add comment